Monday, August 9, 2010

                                            நாகேஷ்

யாராலும் தயாரிக்க முடியாத
ஒரு படத்தை
கடவுள் அன்று தயாரித்தார்.
அதற்கு எங்கு தேடினும்
 கிடைக்காத
கதாநாயகனாய்
உன்னை
அன்று அவர் படைத்திட்டார்.

நிரந்தர கால்ஷீட்
நீ எங்களுக்கு கொடுத்திருக்க..
"இறந்த ஓர் இருப்பையும்"
எங்களுக்கே தந்திருக்க
"அய்யா ... கடவுளே
வேண்டாம்! வேண்டாம்!
உமக்கு நாங்கள் தருகிறோம்
ஒரு ஆயிரம் வராகன்"
விட்டுவிடு அவரை
எங்களுக்கே என்றோமே!

காசிக்கு போகும் சந்யாசியும்
கங்கைக்கு போகும் பரதேசியும்
இங்கிருக்க...
எங்கிருக்கிறாய்  நீ...

ஒன்றும் அறியா பருவத்தில்
அன்னை
அறிமுகம் செய்த சுவைகளில்
என்றும்  ரசிக்கும்
ஓர் சுவையென
உன்னை எங்கள் உதிரத்தில்
ஊற விட்டாளோ
உறைந்து விட்டதய்யா
உதிரத்தில் உன் நினைவு!

தோல் சிவந்தவர்களுக்கும்
துகிலுரித்தவர்களுக்கும்
தேடி கொடுத்தனர்
பல விருதுகள்
ஏராளம் ஏராளம்.
'மாடிப்படி மாதுவாயினும்'
'எதிர்நீச்சல்' போட்ட உன்னை
ஏனோ மறந்தனர்
இந்த நாகரிக கோமாளிகள்!

'தோன்றலில் சிறந்த'
உன்னை விட்டு
தோற்றலில் சிறந்தவர்க்கு
தேடி பரிசளித்தனர்.
நம்ப முடியவில்லை
இல்லை...

'சுட்ட உடல் எழுந்து நடக்கலாம்'
நீ இறந்து போனாய்
என சொன்ன சொல்
எப்படி உண்மையாகலாம்!

No comments:

Post a Comment